தன்னையே வருத்தி…! உலகத்தைத் திருத்திய ஆன்மா!-அவர் பெயர் தான் மகாத்மா!

மகாத்மா காந்தி.

மகாத்மா காந்தி.

தன்னையே வருத்தி…!
உலகத்தைத் திருத்திய ஆன்மா!
அவர் பெயர்தான் மகாத்மா!

ஒரு மனிதன்!
எப்படி வாழக்கூடாது என்பதற்கும்..!

ஒரு மனிதன்!
இப்படிதான் வாழவேண்டும் என்பதற்கும்!

உலகத்திற்கே நீ தான்
மிக சிறந்த உதாரணம்…!

உலகம் முழுவதும் உன் புகழ்
இன்றும் நிலைத்து நிற்பதற்கு
இதுவே உண்மையான காரணம்!

அக்காலத்தில்
உலகம் முழுவதும் பரவிகிடந்த
நிறவெறி; மதவெறி இம்சைகளை ஒழிப்பதற்கு!
‘அகிம்சை’ என்ற அறவழி ஆயுதத்தை
கையில் எடுத்தவனே…!
அதற்காகவே உயிர் உள்ளவரை உழைத்தவனே!

சபர்மதி ஆற்றங்கரையோரம்
‘சத்தியாகிரக ஆசிரமம்’ நீ தொடங்கினாய்!

உப்புக்கு வரி விதித்தற்காக..! -அன்று
வைசிராய்க்கு கடுமையாக
நீ கடிதம் எழுதினாய்!-அதற்காக
அகமதாபாத் முதல் தண்டி வரை
சத்தியாகிரக யாத்திரையை நீ நடத்தினாய்!
வழிநெடுக பொதுமக்களுக்கு
இலவசமாக உப்பு வழங்கினாய்!

நல்ல வேளை தற்போது
நீ உயிரோடு இல்லை.

அன்று நீ எதிர்த்ததாலோ என்னமோ…!
உப்பின் பெயரால்!- இன்று
உலகம் முழுவதும் மிகப்பெரிய
வியாபாரம் நடைப்பெற்று வருகிறது!

உனது கொள்கையெல்லாம்…!
தண்ணீரில் விழுந்த உப்பாக
உன்னோடே கரைந்துபோனது…!
அதை நினைத்து; நினைத்து
எங்களது இரத்தமெல்லாம்
அதிர்ச்சியில் இன்று உறைந்துப்போனது!

அந்நிய நாட்டுப் பொருள்களைப் புறந்தள்ளினாய்!
அதற்காக நாடு முழுவதும் அறைகூவல் விடுத்தாய்!
அந்நிய நாட்டு ஆடைகளைத் தீயிட்டு கொளுத்தினாய்!-
அதற்காக தேசத் துரோகக் குற்றத்தில்
ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றாய்..!

நீ உன் வீட்டின்
அறையில் இருந்த நாட்களை விட;
உலக அமைதிக்காக…!- நீ
சிறையில் இருந்த நாட்கள்தான் அதிகம்!

உலகில் யார் சொன்னாலும்
அவன் கேட்க மாட்டான் என்று தெரிந்தும்;
ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் நீ எழுதினாய்!
உலகமே அரக்கனாக கருதிய ஹிட்லரை
அன்பு நண்பர் என்று நீ வர்ணித்தாய்..!

உலத்தில் நல்ல பழக்கம் உள்ள
கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்..!
கெட்ட பழக்கங்களை கொண்ட
நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்..!-என்பதற்கு
ஹிட்லரும்; நீயும் மிக சிறந்த வரலாற்று உதாரணம்!

ஜாலியன்வாலாபாக் படுகொலையை
நீ வன்மையாக கண்டித்தாய்..!- அதற்காக
ஏற்கனவே பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கிய
கைசர் – ஹிந்த் விருதைத் திருப்பியளித்தாய்!

தன்னையே அரை நிர்வாணக்கி
இந்திய தேசத்தின் மானத்தையும்;
கண்ணியத்தையும்
சர்வதேச அரங்கில் காத்தவனே..!

துப்பாக்கி – பீரங்கிகளையும்…!
வெள்ளையர்களின் வெடிகுண்டு;
அணு குண்டுகளையும்
வெட்கப்பட செய்தவனே…!

பிரார்த்தனைக் கூட்டத்தில்
நடந்த குண்டுவெடிப்பில் கூட
உயிர் தப்பிய நீ!

நாதுராம் கோட்சே எனும் நயவஞ்சகனின்
துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியானது ஏன்?!

யமுனை நதிக்கரையில்
உனது உடல் தகனம் செய்யப்பட்டது!
பல்வேறு புண்ணிய நதிகளில்
உனது அஸ்தி கரைக்கப்பட்டது!
அகா கானின் அரண்மனையில்
உனது சாம்பல் சத்திய சோதனைக்கு
சாட்சியாக இன்றும் இருக்கின்றது..!

உலகம் முழுவதும்
உருவ சிலையாக இருக்கின்றாய்..!
இந்திய ரூபாய் நோட்டுகளில்
நீ அழகாக சிரிக்கின்றாய்!
அஞ்சல் தலைகளில்
நீ அமர்ந்து இருக்கின்றாய்!

இந்தியாவில் 53 பிரதான சாலைகளிலும்
பிற நாடுகளில் 48 புரதான சாலைகளிலும்
பெயரளவில் நீ இருக்கின்றாய்!- ஆனால்
இந்திய அரசியல்வாதிகளிடம் மட்டும்
நீ அந்நியப்பட்டு கிடக்கின்றாய்…!

மகாத்மா-காந்தி

Leave a Reply