குடிகார மகனை கொலை செய்த தந்தை!-திருச்சியில் நடந்த விபரீதம்!

திருச்சி செந்தண்ணீர்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவருடைய மகன் அப்பு @ வில்சன் ஆண்ட்ரூஸ் (வயது 33). திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வில்சன் ஆண்ட்ரூஸ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி பலரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (02.01.2022) மாலை அவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தந்தை அற்புதராஜிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அற்புதராஜ் வீட்டில் தனி அறையில் போதையில் படுத்துக்கிந்த வில்சன் ஆண்ட்ரூஸின் கைகள் மற்றும் கால்களை நைலான் கயிற்றால் இறுக்கி கட்டி; பின்னர் துண்டால் வில்சன் ஆண்ட்ரூஸ் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார். ஆனால், அப்போதும் வில்சன் ஆண்ட்ரூஸ் சாகவில்லை என்பதை அறிந்து, ஆத்திரத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் வில்சன் ஆண்ட்ரூஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொன்மலை காவல் நிலைய போலீசார்; கொலை செய்யப்பட்ட வில்சன் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு (Crime No: 07/2022) பதிவு செய்த பொன்மலை காவல் நிலைய போலீசார், அற்புதராஜை கைது செய்து; நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

-ஆர்.சிராசுதீன்,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply