கல்யாணியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எம்பிபிஎஸ் 2021ஆம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழாவில் காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை வகித்தார்.
125 எம்பிபிஎஸ் மாணவர்களுடன் 2021-ஆம் ஆண்டு 3-வது கல்வியாண்டை தொடங்கும் கல்யாணி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மாணவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்ததுடன் தமது மகிழ்ச்சியையம் மத்திய இணை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
எய்ம்ஸ் குறித்து தெரிவித்த அவர், ஒவ்வொரு மாநிலத்திலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் என்பது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையாகும் என்று கூறினார். இதன் காரணமாக இதுவரை 21 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதுடன் அதில் நவீன சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கும் திறமையான மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஏழைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் என்று கூறினார்.
சுகாதாரக் கட்டமைப்பில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் சமூகம் சார்ந்ததாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்புவதாகத் தெரிவித்தார். 179.82 ஏக்கரில் 960 படுக்கை வசதிகளுடன் 1,754 கோடி ரூபாய் செலவில் கல்யாண் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதை உதராணமாகக் குறிப்பிட்டார்.
–எம்.பிரபாகரன்