பிரதமரின் தேர்வுக்கு தயாராகுங்கள் நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் அதிக அளவில் பங்கேற்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்.

பிரதமர் நரேந்திர மோதி, தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஐந்தாம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. பிரதமரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரடியாக ஒலிபரப்பு ஆகின்றது. இது குறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் புதுச்சேரி ராஜ்நிவாஸில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கொரோனா காலகட்டங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்கள் பயமோ,தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் தேர்வு எழுத பிரதமரே முன்வந்து ஊக்கமளிப்பது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். நாளை புதுச்சேரி ராஜ்நிவாஸில் 50 மாணவர்கள் வந்து சுற்றி பார்த்து விட்டு பிரதமர் நிகழ்ச்சியை திரையில் பார்ப்பார்கள். இவர்களுக்கு பிரதமர் எழுதிய Exam warriors என்ற நூலின் தமிழாக்கப் பிரதிகள் வழங்கப்படும் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply