காவிரி ஆற்றில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு!-திருவெறும்பூர் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி -கல்லணை சாலை, பனையகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 73) இன்று காலை 7 மணி அளவில் பால் பாக்கெட் வாங்கி வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியில் வந்தவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பனையகுறிச்சி அருகே காவிரி ஆற்றில் முட்புதருக்குள் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக இருப்பதாக அப்பகுதிக்கு சென்ற பன்றி மேய்க்கும் நபரொருவர் சொன்ன தகவலை அடுத்து, பனையகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு நேரில் சென்று பார்த்தபோது, அவர் மேற்படி பனையகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பது தெரியவந்தது.

உடனே அருகில் இருந்த நபர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார், சுந்தரமூர்த்தி உடலை மீட்டு காவிரிக் கரைக்கு கொண்டு வந்தனர். காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர் சடலத்தை முழுமையாக ஆய்வு செய்தார்.

அதன் பிறகு உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சுந்தரமூர்த்தி பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், இவரது ஓய்வூதியத்தைக் கொண்டு இவரது குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கடன் பிரச்சனை காரணமாக கடுமையான மன உளைச்சலில் சுந்தரமூர்த்தி இருந்து வந்தார் என்று, அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுந்தரமூர்த்திக்கு ஒரு மகன்; இரண்டு மகள்கள் இருந்த நிலையில், அவரது மகன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டார். மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி காவிரி ஆற்றில் முட்புதருக்குள் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply