தந்தை பிடித்துக்கொள்ள மைத்துனரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில்; தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை!

கண்ணன்(வயது 29) துரைசிங்கம் (வயது 63)

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசிங்கம் (வயது 63). இவரது மகன் கண்ணன்(வயது 29), அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வீரபாண்டி(வயது 20), வீரபாண்டி தங்கை பவனாவுக்கும், துரைசிங்கம் மகன் கண்ணனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வீரபாண்டி, தனது தங்கையின் கணவர் கண்ணனை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

இதனிடையே கடந்த 06.06.2020 அன்று கண்ணனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த மருதாணிக்குளம் பகுதிக்கு சென்ற வீரபாண்டிக்கும், கண்ணனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

வீரபாண்டி.

அப்போது கண்ணனின் தந்தை துரைசிங்கம் வீரபாண்டியை பிடித்துக் கொள்ள; கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மைத்துனர் வீரபாண்டியை வெட்டினார். அதில் பலத்த காயமடைந்த வீரபாண்டி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வீரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணன் மற்றும் துரைசிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா இன்று தீர்ப்பு அளித்தார்.

அதில் கண்ணன் மற்றும் துரைசிங்கம் ஆகியோர் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply