நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளையை வெட்டிப்படுகொலை‌ செய்த மர்ம கும்பல்!-இரவு நேரத்தில் நடந்த விபரீதம்.

பிரபாகரன்.

திண்டுக்கல், அனுமந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவருடைய மகன் பிரபாகரன் ( 26) தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்றல் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிறது.

இந்நிலையில் திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகர் பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன், கார்த்தி, குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடினர்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டி உள்ளது. இதை தடுக்க முயன்ற கார்த்திக் என்பவருக்கும் அருவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

வெட்டுப்பட்ட நபர்களை உடனடியாக அருகில் இருந்த நபர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிந்த 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply