ரயில்வே அமைச்சகம், டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துடன் (சி-டாட்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் 27 ஏப்ரல் 2022 புதன்கிழமை அன்று கையெழுத்திட்டது. ரயில்வேயில் சி-டாட்டின் தொலைதொடர்பு தீர்வுகள் மற்றும் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சி-டாட் மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து இந்திய ரயில்வேயில் தொலைத்தொடர்புகளை நவீனமயமாக்கும் வகையில் கீழ்கண்டவற்றில் இணைந்து செயல்படும்:
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக எல்டிஈ-ஆர் தொழில்நுட்பத்தை உலகத்தரத்தில் பின்பற்றுதல், மேக் இன் இந்தியா கொள்கையின்படி 5ஜி பயன்பாடு, பொருட்களின் இணையம், இயந்திரங்களுக்கான செயல்பாடுகள், ஒன்றிணைந்த நெட்வொர்க் மேலாண்மை இயக்கம், கண்ணாடி இழை கண்காணிப்பு/நெட்வொர்க் மேலாண்மை, காணொலி மென்பொருள், உரையாடல் பயன்பாடு, ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகள் ஆகிய பிரிவுகளில் இணைந்து செயல்படவுள்ளன.
சி-டாட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு ராஜ்குமார் உபாத்யாய் மற்றும் தொலைத்தொடர்பு/ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் திருமதி அருணா சிங் மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ரயில் இயக்கம், பொதுமக்கள் பாதுகாப்பு, உள்நாட்டு மலிவு விலை தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகளை வழங்கல் உள்ளிட்டவற்றில் சி-டாட் மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையேயான ஒருங்கிணைப்பு உதவுவதோடு, நாட்டில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கிறது.
–எம்.பிரபாகரன்