அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு?- பெட்ரோல் டீசல் விலை குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி.

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..

அனைவருக்கும் வணக்கம்.

வாக்குத்தராமல் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்த பிரதமரை, வாக்குத் தவறிய தமிழக முதல்வர் கண்ணியக் குறைவாக விமர்சிப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய காணொளிக் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பற்றி குறிப்பிட்டு சொல்லி, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைத்தும், அதை சில மாநில அரசுகள் தங்கள் வருவாயைப் பெருக்க பயன்படுத்திக் கொண்டன. மத்திய அரசின் விலைக் குறைப்பை மக்களுக்கு பயன்பட தங்கள் மாநில வரியைக் குறைக்கவில்லை. விலையைக் குறைக்க சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழ்நாட்டில் குறைக்க முடியவில்லை என்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு பதிலளித்துப் பேசியிருக்கும் நம் தமிழக முதல்வர் அவர்கள், பிரதமரின் நேரடியான கேள்விக்கு நேர்மையான பதிலைக் கூறாமல், 2014 ஆம் ஆண்டு காலத்திலிருந்து என புதிய கட்டுக்கதையைத் தொடங்குகிறார்.

தேர்தல் வாக்குறுதி தராத மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.10ம் டீசலுக்கு ரூ.4ம் வரியை விலையை குறைத்துவிட்டது. தேர்தல் வாக்குறுதித் தந்த தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.5ம் டீசலுக்கு ரூ.4ம் வரியை விலையை ஏன் குறைக்கவில்லை.

மத்திய அரசு வரிகளை குறைக்கிறதோ இல்லையோ நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் டீசல் விலையை நான்கு ரூபாயும் குறைப்­போம் என்று தேர்தல் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்து 355 நாட்கள் கடந்த பிறகும், திமுக தந்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமல் இருக்க காரணம் என்ன?

எந்த வாக்குறுதியும் தராமலேயே பெட்ரோல் விலையை 10 ரூபாயும் டீசல் விலையை நான்கு ரூபாயும் குறைத்த மத்திய அரசைக் குறை சொல்ல தங்களுக்கு தகுதி இல்லை.நேரடியாக பிரதமர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை நன்கு தெரிந்த நீங்கள் மழுப்பலாக தந்த பதிலை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

உக்ரேன் மாணவர்களை உட்கார்ந்த இடத்தில் இருந்தே மீட்பதற்காக 3 கோடியை செலவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும், நம் தமிழக முதல்வர் அவர்கள், உண்மையை மறுக்க முடியாது என்பதை உணர்ந்திருப்பார். அதாவது, பெட்ரோல் விலை உயர்வு என்பது, தேர்தலுக்குப் பிறகு ஏற்படவில்லை, ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையை. ஜனவரி 2022ல் ஒரு எண்ணெய் பீப்பாய் விலை $72.93 டாலராக இருந்தது இரண்டு மாதத்திற்கு பிறகு ஏப்ரலில் இது $111.86 டாலராக உயர்ந்து விட்டது.

தமிழகத்தில் ₹91,570/- கோடி ரூபாய்க்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இன்னும்₹106,480/- கோடி ரூபாய்க்கு புதிய சாலை கட்டுமான பணிகள் அமைக்க திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பல திட்டங்கள் முடியும் தருவாயில் இருக்கின்றன.

இது தவிர தமிழகத்தில் 292 விவசாய கட்டமைப்புத் திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்காக மட்டும் லட்சக்கணக்கான கோடிகளில் செலவிடப்படுவது தமிழக முதல்வர் அறிந்து இருக்கிறாரா இல்லையா?

இப்படி லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மத்திய அரசுக்கு எங்கிருந்து வரும், ஒவ்வொரு மாநில அரசின் வரி வருவாய்க்கு ஏற்பத்தானே மத்திய அரசு செலவிடும்.

ஒரு தமிழனாக, என் மாநிலத்தின் முதலமைச்சரை மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவார் என்றும் ஒரு சாமானியனாக நானும் எதிர்பார்க்கிறேன்.

கொடுத்த வாக்கை மறப்பதும், சொல்லிய சொல்லை மறுப்பதும், வாக்குறுதிகளை கண்டும் காணாமல் இருப்பதும், இதுபற்றி கேள்வி கேட்பவர்களை வெறுப்பதும், யாருடைய பண்பு என்பதை புண்பட்டு மக்கள் உணர்ந்து கொண்டார்கள். சொன்னதை மறுப்பது என்ற தீயகுணம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உதிரத்தில் இல்லை. மக்களையே தன் சொந்த குடும்பமாக எண்ணி, மக்கள் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும், ஒரு மாமனிதரை நம் பாரதப் பிரதமரை அவதூறு சொல்ல, தமிழக முதல்வருக்கு அருகதை இல்லை.

பிரிவினைவாதத்தை ஊக்குவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, வெற்று அறிவிப்புகளை வைத்து மட்டும் ஆட்சியையும் மக்களையும் சமாளித்துவிடலாம் என்ற அதிகார எண்ணம் அதிக நாட்கள் நீடிக்காது.

பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு நான்கு ரூபாயும் குறைப்போம் என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு இதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply