தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேச விழாவில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!-உத்தரவின் உண்மை நகல்!-முழு விபரம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு குருபூஜை தினத்தன்று நடைபெறும் விழாவில் பட்டினப்பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். இந்நிகழ்ச்சியின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு, திராவிடர் கழகத்தினர் உள்பட ஆளும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு; நானே நேரில் சென்று ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி சுமந்து செல்வேன் என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கு ஒருபுறம் எதிர்ப்பும்; மறுபுறம் வரவேற்பும் எழுந்தது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் அரசு தலையிடக் கூடாது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வு பட்டினப் பிரவேசம் என்றும், அனைவரின் அன்பைப் பெற்ற ஆதீனத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்திருப்பது சரியானது அல்ல என்றும், பாரம்பரிய நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்.

மேலும், பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், பல்லக்கு தூக்கும் 22 பேரும் விருப்பத்தின் பேரிலேயே தூக்குவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுபினர் செல்வப்பெருந்தகை, மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வு என்பது சுமார் 400 ஆண்டுகளாக இருப்பது என்றும், அதற்கு தடை விதித்திருப்பது சரியானது என்றும் 18 ஆதீனங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதனால், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்ட மன்ற உறுபினர்கள் கூச்சலிட்ட நிலையில், குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன் அனைத்து கட்சியினருக்கும் அவரவர் கருத்தைக் கூறும் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.

அவையில் பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மதம் சார்ந்த நிகழ்வுக்கு தடை விதித்துள்ளது தவறானது என்றும், தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர், ஒரு சிலர் தங்களின் தவறுக்காக பட்டினப் பிரவேச விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றனர்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என கூறினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து, தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேச விழாவில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இன்று (08/05/2022) ஆணைப்பிறப்பித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply