கோவில்பட்டி ரயில் நிலையப் பிரச்சினைகள்!- தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!

தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பு ஆலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுமையும் செல்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளும், 30 தொடரிகள், கோவில்பட்டி வழியாகச் செல்கின்றன. ஆனால், சில தொடரிகள் இங்கே நிற்பது இல்லை. அனைத்துத் தொடரிகளும், கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

கோவில்பட்டி தொடரி நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடைப் பாலப் படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், சிரமப்படுகின்றார்கள். எனவே, பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply