பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முறையான ஆவணங்களை இணைக்கும்படி, 25 2022 அன்று பிறப்பித்த உத்தரவை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் திரு.அனுப் சந்திர பாண்டே தலைமையில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த கருத்து முன் வைக்கப்பட்டது. 1951 சட்டம் 29A மற்றும் 29C பிரிவுகளின்கீழ், பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உரிய ஆவணங்களை இணைக்கத் தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு மாநில தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 2022 மே 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 87 அரசியல் கட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜூன் 20 2022-ல் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளை நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 111 கட்சிகளும், சரியான முகவரிகளை கொடுக்க தவறியது மற்றும் முகவரி மாற்றங்கள் குறித்து தெரிவிக்காதது உள்ளிட்ட காரணங்களால், பதிவேட்டில் இருந்து இவற்றை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 25.05.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த அரசியல் கட்சிகள் சரியான முகவரியில் இல்லாதது கண்டறியப்பட்டதாலோ அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கடிதங்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படாமல் திரும்பி வந்ததாகவோ தலைமை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உத்தரவு வெளியான 30 நாட்களுக்குள், ஆண்டு வாரியான தணிக்கை கணக்குகள், தேர்தல் செலவு அறிக்கை, நிதிப்பரிவர்த்தனை உள்ளிட்ட முறையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
–எம்.பிரபாகரன்