தமிழக அரசு, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க. எடுக்கும் நடவடிக்கையை கைவிடவும், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.

சென்னை மாநகரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20,300 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுதோறும் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வேளையில் காலிப்பணியிடங்கள் காலத்தே நிரப்பப்படாததால் போக்குவரத்துக்கான சேவையில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு எதிராக, அரசு போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்க முடிவெடுத்திருப்பதால் போக்குவரத்தில் மக்களின் பயணமும், சேவையும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்ப முன்வர வேண்டும்.

அதே போல தமிழக அரசு, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வினை நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.

மேலும் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2021 ஏப்ரல் முதல் இதுவரை வயது முதிர்வில் ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் இரண்டு வருடங்களாகியும் வழங்கப்படாதது நியாயமற்றது, இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பலமுறை அரசுக்கு அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.

நாளைய தினம் 29.03.2023 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் அரசு போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் தொழிலாளர்களின் நலன் கருதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சுமார் 90,000 தொழிலாளர் குடும்பங்களின் நலன் காத்து, அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமே போக்குவரத்தில் மக்களுக்கான சேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.

எனவே தமிழக அரசு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிடவும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply