தமிழக அரசு, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தனிக்கவனம் செலுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூலம் இயக்கப்படும் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு உடனடி விசாரணையை மேற்கொண்டு, குற்றம் புரிந்தவர்களை பணிநீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் அவ்வப்போது பள்ளி கல்லுரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடைபெறுவதை பத்திரிகை, தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லுரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தெரிவித்தனர்.குறிப்பாக மாணவிகளே பாலியல் தொல்லை சம்பந்தமாக அளித்த பேட்டி மற்றும் புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை நடந்திருப்பது தெரியவருகிறது. இது மிகுந்த வேதனைக்குரிய செய்தி. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு, இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணிநீக்கம் செய்யவும், செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக கல்வி நிறுவனங்கள், கல்வி வளாகத்திற்குள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இப்பிரச்சனையில் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் கலாஷேத்ரா அறக்கட்டளையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மாணவிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply