புனேயில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விளையாட்டு வளாகத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் திறந்து வைத்தார்.

மராட்டியத்தின் புனே நகரில் உள்ள சாவித்திரிபாய் புலே புனே பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விளையாட்டு வளாகம் ஒன்றிற்கு மல்யுத்த வீரர் கே.டி. ஜாதவின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டார். அவர் அதற்கான கல்வெட்டை திறந்து வைத்து, அங்கிருந்த மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

இதனை தொடர்ந்து, அவர் பல்வேறு விளையாட்டு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நடைபயிற்சிக்கான சாதனத்தில் அவர் சிறிது நேரம் பயிற்சி மேற்கொண்டார். துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டார்.

இந்த விளையாட்டு வளாகத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. உலக தரம் வாய்ந்த துப்பாக்கி சுடுதலுக்கான மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் நல்ல முறையிலான பயிற்சியின் கீழ் சிறந்த வசதிகளை பெறுவார்கள். நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற சிறந்த வசதிகள் வரவுள்ளன என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply