பிரதமர் நரேந்திர மோதி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கிவைத்து பக்ஷி பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கிவைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சிக்கு காரணம் இத்திட்டத்திற்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். மூளை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இந்த மையம் முன்னணி ஆராய்ச்சி மையமாகத் திகழும்”.
“நாடு முழுவதும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டிய இவ்வேளையில், பக்ஷி பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனையின் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. வருங்காலத்தில் சுகாதாரத் துறையை வலுப்படுத்தி, ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்”.
மூளை ஆராய்ச்சி மையம், ஆராய்ச்சிக்கான வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன், வயது மூப்பினருக்கான மூளை சம்பந்தமான நோய்களை களைவதற்கு ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 832 படுக்கை வசதிகளுடன் பக்ஷி பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இது அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ துறையை ஒருங்கிணைக்க உதவும்.
நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை இது அளித்திடும். புதிய கண்டுபிடிப்புகளுடனான தீர்வுகளுடன் நாட்டில் சுகாதார சேவைகள் மேம்பட இம்மையம் உதவும்.
–எஸ்.சதிஸ் சர்மா