நீர்வழிப்போக்குவரத்து பொருளாதார ரீதியில் பலன் தருவதுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்தாகத் திகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் “சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல்வேறு நீர்வழி மார்க்கங்களில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணங்களில் 40 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. இதைத் தவிர எரிபொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பது, கரையோர வணிகத்திற்கான சலுகைகள், கடலோர சரக்குக் கப்பல் மற்றும் உள்நாட்டு கப்பல்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்றவையும் அளிக்கப்படுகிறது.
கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குதல், கடலோர சரக்குக் கப்பல்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுத் தருதல் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில், கடலோர கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. இதன் கீழ் தமிழகத்தின் கடலோர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இரண்டு திட்டங்கள் முடிக்கப்பட்டிருப்பதுடன், ஒரு திட்டத்திற்கான பணி மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் திட்டமிடப்பட்டுள்ள ஒரு வளர்ச்சித் திட்டப் பணிக்காக இதுவரை ரூ.70 கோடிக்கான நிதி ஒப்புதல் பெறப்பட்டு அதிலிருந்து ரூ.64.94 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இதனைத் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்