காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே, தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டும் மறுசீரமைப்புத் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
திரு அஸ்வினி வைஷ்ணவ் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்புக் குறித்தும் அவர்கள் விளக்கி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) குழுவினரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். இதுபோன்ற மக்களிடையேயான பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபுகள், அறிவு மற்றும் கலாச்சாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இந்த இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
திவாஹர்