அவுரங்காபாதில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற பெண்கள் 20 கூட்டத்தில் இந்திய கடற்படையுடனான தங்களது அனுபவங்களை இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளும் மூத்த கடற்படை அதிகாரியின் துணைவியும் பகிர்ந்து கொண்டனர். ‘தடைகளைத் தகர்த்தல்: வழக்கத்திற்கு மாறான பெண்களின் கதைகள்’ என்ற கருப்பொருளில் அவர்கள் உரையாடினார்கள். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய பிரத்தியேகமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பல பரிமாண ஆற்றலுடன், இந்திய கடற்படை, கடலின் மேற்பரப்பிலும், கடலுக்கு அடியிலும், மேலே வானத்திலும் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகள் ராணுவம் தூதரகம், பாதுகாப்பு சார்ந்த மற்றும் நன்மை பயக்கும் பணிகளை உள்ளடக்கியுள்ளது. கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் போன்ற கடற்படையின் தளங்கள் நவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் இது போன்ற கருவிகளை இயக்கும் பணியாளர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதில் கடற்படை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. முன்னர், கடற்படையில் ஒரு சிலப் பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் நிலையில் அனைத்துப் பிரிவுகளிலும் தற்போது பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது துணிச்சலான நடவடிக்கையாகும். ஜி20 பெண்கள் குழுக் கூட்டத்தில் பகிரப்பட்ட அனுபவங்கள் பிறருக்கு எழுச்சியூட்டியதுடன் மகளிர் சக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தன.
எஸ்.சதிஸ் சர்மா