தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர். கடந்த மாதம் (பிப்ரவரி 23, 2023) மட்டும் ஐந்து லட்சம் நோயாளிகள் இதில் இணைந்துள்ளனர்.
ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “டிஜிட்டல் தீர்வுகளை பயன்படுத்தி சீரான மருத்துவ விநியோக சூழலியலை உருவாக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையின் மூலம் நோயாளிகளின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் தகவல்களை நேரடியாகப் பகிர்ந்து, டிஜிட்டல் பதிவு சேவைகளை மருத்துவமனைகள் வழங்குகின்றன. பல்வேறு தகவல்களைப் பதிவு செய்ய வேண்டியதில்லை, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக பதிவு டோக்கன்களை நோயாளிகள் பெற இது உதவிகரமாக உள்ளது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 25,000 புற நோயாளிகள் பிரிவு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. வெகு விரைவில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்”, என்று கூறினார்.