கல்லணை கால்வாயில் மகளைப் பறிக்கொடுத்தவரின் உடல் சூரக்கோட்டை கோவிலூர் அருகே கரை ஒதுங்கியது!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளியூர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த பொழுது BHEL நிறுவன ஊழியரும், அவரது ஆறு வயது மகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 40 ) இவர் BHEL நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.மேலும் பத்தாளப்பேட்டையில் BHEL ஊழியர்களால் நடத்தப்படும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உறுப்பினராகவும் உள்ளார்.

இவருக்கு கிருத்திகா (வயது13) இவர் BHEL வளாகத்தில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஆஷிகா (வயது6) இவர் BHEL வளாகத்தில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், 15.09.2024 அன்று மதியம் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு சுரேஷ் கிளியூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் குளிப்பதற்காக முயன்றுள்ளார்.

அப்பொழுது கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் இருந்துள்ளார். ஆஷிகா மட்டும் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்காக சென்ற பொழுது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக அவரது தந்தை சுரேஷ் ஆற்றில் குதித்துள்ளார். இதில் சுரேஷும் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிருத்திகா தனது தந்தையும்,
தங்கையும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து கரையில் இருந்தபடி கூச்சலிட்டு கதறி உள்ளார்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து ஆஷிகாவை மீட்டு உடனடியாக BHEL மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆஷிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுரேஷின் உடலை தேடும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்த நிலையில் இன்று (16.09.2024) தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை, கோவிலூர் அருகே சுரேஷின் உடல் கரை ஒதுங்கி உள்ளது.

Leave a Reply