சாலைகள், பாலங்கள் கட்டுமானத்தில் நவீன தொழில்நுட்பங்கள்- போபாலில் இரண்டு நாள் மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, தேசிய வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேம்பட்ட போக்குவரத்து முறை பொருளாதார வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கிறது என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். போபாலில் மத்தியப் பிரதேச பொதுப்பணித் துறையும் இந்திய சாலைக் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்துள்ள “சாலைகள், பாலங்கள் கட்டுமானத்தில் சமீபத்திய வளர்ந்து வரும் போக்குகளும் நவீன தொழில்நுட்பங்களும்” என்பது குறித்த இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க அமர்வில் அமைச்சர் உரையாற்றினார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று கூறிய திரு நிதின் கட்கரி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, இந்தியாவின் எதிர்காலத்திற்கான சிறந்த பாதையை அமைக்கிறது என்றார். சமரசமற்ற தரத்தை உறுதி செய்தல், சாலை விபத்துக்களைக் குறைத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கள சவால்களைத் தீர்ப்பது போன்ற முக்கிய நோக்கங்களை அவர் எடுத்துரைத்தார். இது அனைத்து நிலைகளிலும் கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று அவர் கூறினார்.

கிராமப்புற சாலை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நிதின் கட்கரி, சாலை கட்டுமானத்தில் கழிவுப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் “கழிவிலிருந்து செல்வம்” கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தமது உரையில், இந்த மாநாடு மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு புதிய வேகத்தைக் கொண்டுவரும் என்றும், பல்வேறு கட்டுமானத் திட்டங்களின் வெற்றிக்கு கணிசமாக பங்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் மாநாட்டில் பல தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் நாடு முழுவதிலுமிருந்து வல்லுநர்கள் இதில் பங்கேற்று, புதுமையான தொழில்நுட்பங்கள், கட்டுமானப் பொருட்கள், ஒப்பந்த செயல்முறையில் உள்ள சவால்கள் போன்றவை குறித்து விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக சாலை, பால கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறுகிறது.

Leave a Reply