ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். மோடி அரசின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சூழல் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். ஊடுருவலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தீவிரவாதிகளின் இருப்பிடத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதைப்பொருள் கட்டமைப்பு ஆதரவளித்து வருவதாக திரு. அமித் ஷா கூறினார். போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
புதிய குற்றவியல் சட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, தடயவியல் அறிவியல் ஆய்வகப் பணிகளில் புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு திரு. அமித் ஷா உத்தரவிட்டார்.
திவாஹர்