தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற் பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமான கடற் பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை 11.2.2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது திறந்தவெளி அனுமதி கொள்கை (Opean Acreage Licensing Policy) எனும் ஹைட்ரோ கார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோமீட்டர் பரப்பிலான வட்டாரமும் இடம் பெற்றுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதி உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் 1,91,986 சதுர கிலோ மீட்டர் ஏலம் கோரப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் பகுதியில் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை (OALP) அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடற்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
மீன்வளம் பாதித்தால் இராமநாதபுரம்,குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் .
எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்