பாதுகாப்புத் துறையில் இந்தியாவை முன்னோடியாக திகழச் செய்யவும், புதுமை & தொழில்நுட்ப மையமாக மாற்றவும் தனியார் துறையினருக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பாதுகாப்புத் தளவாட தொழிலில் பங்கேற்பு என்ற நிலையிலிருந்து, முன்னணி நாடு என்ற  நிலைக்கு உயர்த்த முன்வருமாறு தனியார் துறையினரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவை புதுமை மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றி, உலகில் உள்ள வலிமையான நாடுகளில் ஒன்றாக மாற்றத் தேவையான  முழு ஒத்துழைப்பை அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

புதுதில்லியில்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை விரைவுப்படுத்துதல் குறித்த பயிலரங்கில் பங்கேற்ற அவர், பாதுகாப்புத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைத் தெரிவிக்க முன்வரும் புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு, ‘கனவு சவால் 5.0’-வையும் தொடங்கிவைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், தற்போது தொழில்நுட்பம், பழமையான போர் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வழக்கத்திற்கு மாறான போர்முறை  உருவாகியுள்ளது என்றார்.  தற்கால போர் முறையில், ட்ரோன்கள் இணையவழித் தாக்குதல், உயிரி ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு போன்ற  புதிய பரிமாணங்கள் உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்றத்திற்கான இந்தக் கட்டத்தில், பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் பாதுகாப்புத்துறையை வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்தார். நமது விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இளம் தொழில் முனைவோர் ஒன்றிணைந்து இந்த பயிலரங்கை நடத்துவது மகிழ்ச்சிக்குரியது என்றும் அவர் கூறினார்.

வழக்கத்திற்கு மாறான போர் முறையில் வெற்றி பெற, உலகம் இதுவரை அறிந்திராத புதிய சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். .

Leave a Reply