உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோதி.

அசாம் மாநிலம் குவஹாத்தியில் அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் வரவேற்ற திரு மோடி, “கிழக்கு இந்தியாவும், வடகிழக்கு இந்தியாவும் இன்று எதிர்காலத்திற்கான ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றன என்று கூறினார். அசாமின் சிறப்பான திறன் மற்றும் முன்னேற்றத்தை உலக நாடுகளுடன் இணைக்கும் மாபெரும்  முன்முயற்சியாக அசாம் அனுகூலம் உள்ளது” என்று கூறினார். இந்தியாவின் வளத்தில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார். “தற்போது நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்லும் போது, கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தங்களது உண்மையான திறனை வெளிப்படுத்தும்” என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அசாம் அனுகூலம் அமைப்பும் இதே உணர்வின் பிரதிநிதி என்று கூறிய அவர், இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்தார். 2013-ம் ஆண்டு அகரவரிசையில் அ என்றால் அசாம் என்று சொல்லிக்கொடுக்கும்  காலம் வெகு தொலைவில் இல்லை என்று தான் கூறியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

“உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், நிபுணர்கள் ஒருமனதாக ஒரு உறுதியை ஒப்புக்கொள்கிறார்கள்: அதுதான் இந்தியாவின் விரைவான வளர்ச்சி” என்று பிரதமர் கூறினார். இந்த நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இன்றைய இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் இளைஞர்கள்மீது உலக நாடுகள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளன என்றும், அவர்கள் விரைவாக திறன் மிக்கவர்களாகவும், புதுமையானவர்களாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புதிய நடுத்தர வகுப்பினர் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதையும், புதிய விருப்பங்களுடன் வறுமையிலிருந்து மீண்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார். அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கைத் தொடர்ச்சியை ஆதரிக்கும் இந்தியாவின் 140 கோடி மக்கள் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கையை சுட்டிக் காட்டிய திரு மோடி, சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி வருவதை எடுத்துரைத்தார். மேலும், இந்தியா தனது உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, பல்வேறு உலகளாவிய பிராந்தியங்களுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இணைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு ஆசியாவுடனான வலுவான இணைப்பு மற்றும் புதிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழித்தடம் ஆகியவை புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மீது வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கையை எடுத்துரைத்த திரு மோடி, “இந்தியாவின் வளர்ச்சியில் அசாமின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டார். அசாம் அனுகூலம் உச்சி மாநாட்டின் முதலாவது பகுதி 2018-ல் நடைபெற்றது, அந்த நேரத்தில் அசாமின் பொருளாதாரம் ரூ. 2.75 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, அசாம் சுமார் ரூ.6 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. தங்கள் அரசின் கீழ், அசாமின் பொருளாதாரம் வெறும் ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், இது மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தங்களுடைய அரசுகளின் இரட்டை விளைவு என்று அவர் கூறினார். அசாமில் ஏராளமான முதலீடுகள் அதை வரம்பற்ற சாத்தியக்கூறுகளின் மாநிலமாக மாற்றியுள்ளன என்று அவர் கூறினார். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். சமீப ஆண்டுகளில் இணைப்பு தொடர்பான உள்கட்டமைப்பில் தங்கள் அரசு விரிவாக பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது 70 ஆண்டுகளில் கட்டப்பட்ட மூன்று பாலங்கள் மட்டுமே இருந்தன என்று அவர் ஒரு உதாரணத்தை குறிப்பிட்டார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களில் ஒன்று பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் பெயரிடப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2014 க்கு இடையில், அசாமின் சராசரி ரயில்வே பட்ஜெட் ரூ .2,100 கோடியைப் பெற்றிருந்தது.  ஆனால் தங்களின் அரசு அசாமின் ரயில்வே பட்ஜெட்டை நான்கு மடங்கு அதிகரித்து ரூ.10,000 கோடியாக உயர்த்தியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் 60-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், வடகிழக்கில் முதலாவது பகுதி அளவிலான அதிவேக ரயில் தற்போது குவஹாத்தி மற்றும் புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அசாமில் விமான போக்குவரத்து விரைவாக விரிவடைந்து வருவதை குறிப்பிட்ட பிரதமர், 2014-ம் ஆண்டு வரை 7 வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 30 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த விரிவாக்கம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த மாற்றங்கள் உள்கட்டமைப்புடன் மட்டும் செயல்படுத்தப்படாமல், சட்டம் ஒழுங்கில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஏராளமான அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் திரு மோடி தெரிவித்தார். அசாமில் உள்ள ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு இளைஞரும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

“இந்தியா பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும், நிலைகளிலும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை சந்தித்து வருகிறது, மேலும், வணிகம் செய்வதை எளிதாக்கும் தெற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தொழில்துறை மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் கலாச்சாரத்தை மேம்படுத்த ஒரு விரிவான சூழல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது” என்று திரு மோடி கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் உற்பத்தி ஆகியவற்றுக்கு சிறப்பான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்கள்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன  என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டின் உள்கட்டமைப்பில் அரசு கணிசமாக முதலீடு செய்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். நிறுவன சீர்திருத்தம், தொழில், உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள்  ஆகியவற்றின் கலவைதான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இரட்டை என்ஜின் வேகத்தில் முன்னேறிச் செல்லும் அசாமிலும் இந்த முன்னேற்றம் காணப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய அசாம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அசாம் அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், அசாமின் திறமை வாய்ந்த மக்கள் மற்றும் அவர்களது அரசின் அர்ப்பணிப்பே இதற்குக் காரணம் என்றார். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு இடையே நுழைவாயிலாக அசாம் வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த  சக்தியை மேலும் வலுப்படுத்த அரசு வடகிழக்கு உருமாற்ற தொழில்மயமாக்கல் திட்டமான “உன்னதி” ஐ தொடங்கியுள்ளது என்று கூறினார். ‘உன்னதி’ திட்டம் அசாம் உட்பட முழு வடகிழக்கு பிராந்தியத்திலும் தொழில், முதலீடு மற்றும் சுற்றுலாவை விரைவுப்படுத்தும் என்று அவர் எடுத்துரைத்தார். தொழில்துறை கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தையும், அசாமின் வரம்பற்ற திறனையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அசாமின் இயற்கை வளங்கள் மற்றும் உத்திசார்ந்த அமைவிடம் ஆகியவை முதலீட்டிற்கு உகந்த இடமாக அதை ஆக்கியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். அசாம் தேயிலையானது அசாமின் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார். கடந்த 200 ஆண்டுகளில் இது ஒரு உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது, மற்ற துறைகளிலும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

Leave a Reply