சத்தர்பூரில் கதாவில் நடைபெற்ற பிரமாண்ட திருமண நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள கதாவில் இன்று (பிப்ரவரி 26, 2025) ஸ்ரீ பாகேஷ்வர் ஜன் சேவா சமிதி ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய குடியரசுத் தலைவர், தற்போது நமது நாடு மகளிர் மேம்பாடு என்ற நிலையிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலையை நோக்கி முன்னேறி வரும் வேளையில், நமது மகள்கள் மற்றும் சகோதரிகளை வலிமையானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் உருவாக்க நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கூறினார். மகளிருக்கான கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எங்களது சிறிய முயற்சிகள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கூறினார். மகளிர் தங்கள் கல்வி மற்றும் தன்னம்பிக்கைக்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நமது பாரம்பரியத்தில், துறவிகள் பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சமகால சமூகத்தில் நிலவும் சமூக அவலங்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பியதாகக் குறிப்பிட்டார். குருநானக், துறவி ரவிதாஸ், துறவி கபீர் தாஸ், மீராபாய் அல்லது சந்த் துக்காராம் என அனைவரும் தங்கள் போதனைகள் வாயிலாக நேரான பாதையைப் பின்பற்ற மக்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்கள். இந்திய சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பு அவர்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை அளித்துள்ளது. தற்சார்பு, நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தியாவை உருவாக்குவதில் சமகால ஆன்மீகத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.

Leave a Reply