தமிழக அரசு மக்காச்சோளம் மீது விதித்துள்ள 1 % வரியை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சம்பந்தமாக விவசாயிகளின் கோரிக்கைகளை
நிறைவேற்ற வேண்டும். வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40 க்கும் மேற்பட்ட விவசாய
உற்பத்திப்பொருட்களுக்கு 1 % செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது.

மக்காச்சோளத்திற்கு
ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 % செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை
உள்ளது. தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர்,
திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி,
திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு
விற்கப்படும் மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரியை விதித்துள்ளது.

இதனால் விவசாயிகள்
பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். அதாவது விவசாயிகள்
நேரடியாக விவசாய நிலங்களில் வியாபாரிகளுக்கு விற்கும் பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பு என்பது ஏற்புடையதல்ல என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வேளாண் விற்பனை வளாகத்திற்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு 1 % செஸ் வரி விதிப்பு ஏற்புடையது என்கின்றனர் விவசாயிகள். குறிப்பாக விற்பனைக்குழு வளாகத்திற்கு வெளியே விவசாயிகள் நேரடியாக விவசாய நிலத்திலிருந்து வியாபாரிகளுக்கு விற்பதற்கு வரி விதித்திருப்பது, வரி கட்டாமல் செல்லக்கூடிய
வாகனங்களை பிடித்து அபராதம் விதிப்பது ஆகியவற்றால் கிராமத்திற்கு வியாபாரிகள் வராமல் 22 மாவட்ட மக்காச்சோளம் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு
வருமானம் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி விதித்து, மக்காச்சோளத்தின் விலையை அதிகரிக்கச்செய்து மக்காச்சோளத்தை விற்க முடியாத அளவிற்கு விவசாயிகள் மீது சுமையை ஏற்றியுள்ளது தமிழக அரசு.

ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 க்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் பயன் பெறக்கூடிய நிலையில், தற்போது ரூ. 2,800 க்கு விற்று வந்த
மக்காச்சோளம், இப்போதைய செஸ் வரி விதிப்பால் ரூ. 2,300 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு
குவிண்டாலுக்கு ரூ. 500 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசே. எனவே
தமிழக அரசு, வேளாண்மை துறைக்கு உட்பட்டு செயல்படும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
விதித்திருக்கக்கூடிய 1 % செஸ் வரியை வேளாண் விற்பனைக்குழு வளாகங்களில் மட்டும் வசூலிக்க
வேண்டும் என திருத்தம் செய்யவும், வேளாண் விற்பனை வணிகத்துறையின் பட்டியலிடப்பட்டுள்ள 40
பொருட்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும்
விற்பனைக்கு முழுமையாக வரி விலக்களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்
மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply