குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 10, 2025) கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாறிவரும் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப இளம் தலைமுறையினரை தயார்படுத்துவது என்பது உயர்கல்வி நிறுவனங்களுக்கு சவாலான பணியாக உள்ளது என்று கூறினார். நாட்டின் சமச்சீரான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்கள் கிராமங்களைச் சென்றடைவது அவசியம் என்று தெரிவித்தார். குரு ஜம்பேஷ்வர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இந்தச் சூழலில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த  மாணவர்கள் 

அதிக எண்ணிக்கையில்

உள்ளனர் என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அந்த மாணவர்கள் தங்கள் கிராமம் மற்றும் நகர மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நல்ல கல்வியை மற்றவர்களும் பெற ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள், இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் அதன் மாணவர்கள்,  ஆசிரியர்கள் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தொழில் அடைகாப்பகம், புத்தொழில், காப்புரிமை, ஆராய்ச்சி திட்டங்கள் ஆகிய  சிறப்புத் துறைகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் மாணவர்களிடையே புத்தாக்க் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் உணர்வை வளர்க்கும் என்றும் நாட்டை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்ற உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி என்பது அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதற்கான வழிமுறை மட்டுமல்ல என்றும் குடியரசுத்தலைவர் மாணவர்களிடம் கூறினார். கல்வி என்பது ஒரு மனிதனுக்குள் ஒழுக்கம், இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற வாழ்க்கை மதிப்புகளை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகும். கல்வி ஒரு தனிநபரை வேலைக்கு தகுதியுள்ளவராகவும், சமூகப் பொறுப்புகளை அறிந்தவராகவும் ஆக்குகிறது.  சமூகப் பொறுப்புகளை நிறைவேற்ற மாணவர்களுக்கு தொழில் முனைவு உதவும் என்று அவர் கூறினார்.

Leave a Reply