மத்திய பெட்ரோலிய துறை மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கு ரூ. 11.81-க்கும் சில்லறைக்கு 55 காசும் விலை உயர்த்தி 18-1-2013 அன்று உத்தரவிட்டது.
இந்த இரட்டை விலை உயர்வு திட்டத்தினால் தமிழக போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்கள் மத்திய பெட்ரோலிய நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதால் லிட்டருக்கு ரூ. 11.81 காசு அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்குகின்றன. எனவே இரட்டை விலை உயர்வு திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, டீசல் விலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இரட்டை விலை உயர்வு திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.