வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் – எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம்  கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000  கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின்  இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மகாதேவரை வணங்கி,  நல்ல சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் லோஹ்ரி  வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நமது பண்டிகைகள் குறித்த  நம்பிக்கை, தவம், தொண்டு ஆகியவை பற்றியும் பண்டிகைகளில்  நதிகளின் பங்கு குறித்தும் பிரதமர் விளக்கினார். இதன் மூலம் நதி நீர் வழித்தடங்கள் தொடர்பான திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காசியில் இருந்து திப்ருகர் வரையிலான மிக நீளமான ஆற்றுப் பயணம் இன்று கொடியசைத்து தொடங்கப்பட்டுள்ளது, உலக சுற்றுலா வரைபடத்தில் வடஇந்தியாவின் சுற்றுலாத் தலங்களை முன்னிலைப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ரூ. 1000 கோடி மதிப்பிலான வாரணாசி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் பிற திட்டங்கள் கிழக்கு இந்தியாவின் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உந்துதலைக் கொடுக்கும் என்றார் அவர்.

ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் கங்கை நதியின் முக்கியப் பங்கை விளக்கிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் கங்கை கரையைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதால், இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேற நேர்ந்த வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை மாற்றுவதற்கு  இரட்டை அணுகுமுறை பின்பற்றப்பட்டதாக பிரதமர் விளக்கினார். ஒருபுறம், நமாமி கங்கை மூலம் கங்கையை சுத்தப்படுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, மறுபுறம் ‘அர்த் கங்கை’ திட்டத்தின் மூலம்  கங்கை கடந்து செல்லும் மாநிலங்களில் வீரியமான பொருளாதார  சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணத்தில் பயணம் செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் உரையாற்றிய பிரதமர், “இன்று உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது ” என்றார். பிராந்தியம் அல்லது மதம், மதம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்  திறந்த இதயத்துடன், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதால், இந்தியாவை இதயத்திலிருந்து மட்டுமே உணர முடியும் என்று அவர்  கூறினார்.

ஆற்றுப் பயணத்தின் அனுபவத்தைப் பற்றி விளக்கிய பிரதமர், அதில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சிறப்பு இருப்பதாகத் தெரிவித்தார். ஆன்மீகத்தை விரும்புபவர்கள் காசி, புத்த கயா, விக்ரம்ஷிலா, பாட்னா சாஹிப் மற்றும் மஜூலி போன்ற இடங்களைச் செல்வார்கள் என்றும், பன்னாட்டு பயண அனுபவத்தை எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் பங்களாதேஷில் உள்ள டாக்கா வழியாகவும் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.  இந்தியாவின் இயற்கை பன்முகத்தன்மையைக் காண விரும்புவோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். சுந்தரவனம் மற்றும் அஸ்ஸாம் காடுகளை இந்தக் கப்பல்  கடந்து செல்லும். இந்தப் பயணமானது 25 வெவ்வேறு நதிகளின் வழியே செல்லும் என்பதை குறிப்பிட்ட  பிரதமர், இந்தியாவின் நதி அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தக் கப்பல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இந்தியாவின் எண்ணற்ற சமையல் மற்றும் உணவு வகைகளை ஆராய விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கப்பலில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அதன் நவீனத்துவத்தின் அசாதாரண ஒருங்கிணைப்பை ஒருவர் காணலாம்”, என்று கூறிய பிரதமர், நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உல்லாச சுற்றுலாவின் புதிய சகாப்தத்தை விளக்கினார். “வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அனுபவத்தைப் பெற்ற இந்தியர்களும் இப்போது வட இந்தியாவை நோக்கிச் செல்லலாம்”என்று பிரதமர் கூறினார். இனிமையான, சொகுசு பயண அனுபவத்தை மனதில் கொண்டு, நீர்வழி சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாட்டின் பிற உள்நாட்டு நீர்வழிகளில் இதுபோன்ற சுற்றுலாக்கள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் உலகளாவிய சூழலில், இந்தியா பற்றி அறிந்து கொள்ளும்  ஆர்வமும் அதிகரித்து வருவதால், சுற்றுலாவின் வலுவான கட்டத்தில் இந்தியா நுழைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அதனால்தான், கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் பிரதமர். நம்பிக்கைக்குரிய இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. காசி அத்தகைய முயற்சிகளுக்கு நேரடி உதாரணம். மேம்படுத்தப்பட்ட வசதியுடன் காசி விஸ்வநாதர் ஆலயம் புத்துயிர் பெற்றதால், காசிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. நவீனத்துவம், ஆன்மீகம்,  நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட  புதுமையான அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு புதிய டென்ட் சிட்டி வழங்கும்.

2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் எடுக்கப்பட்ட கொள்கைகள், முடிவுகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரதிபலிப்பே இன்றைய நிகழ்வு என பிரதமர் கூறினார். “21ஆம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு, இந்தியாவில் உள்கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு தசாப்தமாக திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா இப்போது காண்கிறது. வீடுகள், கழிப்பறைகள், மருத்துவமனைகள், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு, கல்வி நிறுவனங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ரயில்வே, நீர்வழிகள், விமானப் பாதைகள், சாலைகள் என அனைத்துமே இந்தியாவின் விரைவான வளர்ச்சியின் வலுவான அடையாளங்களாக உள்ளன  என்று அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்த, மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் இந்தப் போக்குவரத்து முறையில் வளமான வரலாறு இருந்த போதிலும், இந்தியாவில் நதி நீர்வழிகளின் பயன்பாடு குறைவாக இருந்ததை பிரதமர் சுட்டிக் காட்டினார். 2014 க்குப் பிறகு, இந்தியா இந்த பண்டைய வலிமையை நவீன இந்தியாவின் காரணத்திற்காக பயன்படுத்துகிறது. நாட்டின் பெரிய ஆறுகளில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த புதிய சட்டம் மற்றும் விரிவான செயல் திட்டம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் நாட்டில் 5 தேசிய நீர்வழிப்பாதைகள் மட்டுமே இருந்தன என்றும், இப்போது நாட்டில் 111 தேசிய நீர்வழிகள் இருப்பதாகவும், சுமார் இரண்டு டஜன் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதேபோல், ஆற்று நீர் வழித்தடங்கள் வழியாக சரக்கு போக்குவரத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 30 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி என்ற கருப்பொருள் குறித்து பேசிய பிரதமர், இன்றைய நிகழ்வுகள் கிழக்கு இந்தியாவை வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்ற உதவும் என்றார். இது ஹால்டியா பன்மாதிரி முனையத்தை வாரணாசியுடன் இணைக்கிறது. இந்தியா- பங்களாதேஷ் நெறிமுறை வழி  வடகிழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொல்கத்தா துறைமுகத்தையும் பங்களாதேஷையும் இணைக்கிறது. இது உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் இருந்து பங்களாதேசுக்கு வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

திறமையான பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கவுகாத்தியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல்களை பழுதுபார்ப்பதற்காக அங்கு  புதிய வசதியும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். “அது ஒரு உல்லாசக் கப்பலாக இருந்தாலும் சரி, சரக்குக் கப்பலாக இருந்தாலும் சரி, அவை போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதுடன்,  அவற்றின் சேவையுடன் தொடர்புடைய முழுத் துறையும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்று பிரதமர் கூறினார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply