இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், 13% அதிகரித்து 19.69 பில்லியன் டாலராக இருந்தது. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 19.7 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 17.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையால், நடப்பு நிதியாண்டின், (2022-23) ஏற்றுமதி இலக்கில் முதல் 9 மாதங்களிலேயே 84% அளவிற்கு ஏற்றுமதி இலக்கு அடையப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 23.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற இலக்கில் முதல் 9 மாதங்களில் 19.694 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகளின் ஏற்றுமதி 30.36% அதிகரித்து, 1472 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
எஸ். சதிஷ் சர்மா