பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (சிஏபிஎப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு.அமித் ஷாவின் முயற்சியில், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎப்-ல் சேர்வதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, வினாத்தாள் பின்வரும் 13 பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும்:
அசாமி
பெங்காலி
குஜராத்தி
மராத்தி
மலையாளம்
கன்னடம்
தமிழ்
தெலுங்கு
ஒடியா
உருது
பஞ்சாபி
மணிப்பூரி
கொங்கனி
லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழியிலோ அல்லது பிராந்திய மொழியிலோ தேர்வில் கலந்துகொள்ள இந்த முடிவு வழிவகுப்பதுடன், அவர்களின் தேர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
பல இந்திய மொழிகளில் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூடுதலாக கையெழுத்திடும்.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதன்மைத் தேர்வுகளில் சிஏபிஎப் காவலர்கள் பொதுப்பணி தேர்வும் ஒன்றாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் 2024 ஜனவரி 01 முதல் தேர்வு நடத்தப்படும்.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அரசுகள் உள்ளூர் இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டிற்குச் சேவையாற்றும் வகையிலும், அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை மற்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் , பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.
திவாஹர்